இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்; பதில் சட்டங்கள் தேவையில்லை கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்; பதில் சட்டங்கள் தேவையில்லை கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு!
பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக எந்தவொரு புதிய சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும், அதற்குப் பதிலாக மாற்று சட்டம் கொண்டுவரப்படமாட்டாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது உறுதியளித்திருந்தது. நிலைமை இவ்வாறிருக்க ஒரு வருடம் நீக்கப்படவில்லை. எனவே, விரைவில் அது முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக வேறு எந்தச் சட்டங்களையும் கொண்டுவரக்கூடாது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் நாட்டில் பாரதூரமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜே.வி.பி.யினர்கூட பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே, கடந்தகால வரலாறுகளை உணர்ந்து அந்தச் சட்டத்தை விரைவாக நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்- என்றார்.