இலங்கை
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்!
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்!
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள், இன்றையதினம் நேரில்சென்று மருத்துவமனை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்குநிலைக்கு கொண்டு வருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு மருத்துவமனைகளுக்கு நகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதிசெய்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து பார்வையிடவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்.அசேல டிசாநாயக்க, உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்.துஸ்யந்தன், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர்.பிரபாத், உதவி மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர்.தயாளினி, மகப்பேற்று நிபுணர் மருத்துவர் சுதர்சன் ஆகியோரோடு நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில், பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்று பிரிவை இயக்குவதிலுள்ள தடைகள், ஆளணி உருவாக்கம் மற்றும் மேலதிக ஆளணி நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அங்குள்ள உபகரணத் தொகுதிகளை வெளியிடங்களுக்கு நகர்த்துவது தொடர்பில் தமது மட்டத்தில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவ்வாறான முயற்சிகளுக்கு தாம் ஒருபோதும் உடன்படப்போவதில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, குறித்த பிரிவை இயக்குவதற்கான ஆளணி நியமனம் தொடர்பில் கடந்த 2025.05.29 ஆம் திகதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தன்னால் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் 40 தாதியர்கள் உள்ளிட்ட 146 வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்தைக் கோருவதன் மூலம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
