இலங்கை
ரணிலின் கைதை எதிர்த்து குப்பைகளே சேர்ந்துள்ளன; அமைச்சர் பிமல் விமர்சனம்!
ரணிலின் கைதை எதிர்த்து குப்பைகளே சேர்ந்துள்ளன; அமைச்சர் பிமல் விமர்சனம்!
ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிராகக் குப்பைகள் ஒன்ரு சேர்ந்துள்ளன. கறுப்பு யூலை இனக்கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தபோதே ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். தற்போது கைதாகியுள்ளவிடயம் ஒருசிறிய பிரச்சினைதான் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கை அரசாங்க பழிவாங்கல் அல்ல. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அது நடந்துள்ளது. இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியாதவர்கள், மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களே தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். ரணிலின் காலத்திலேயே யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டது. கறுப்பு ஜூலைக் கலவரம் இடம்பெற்றது. அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வவுனியா, செட்டிகுளம் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். பட்டலந்த வதை முகாம் அறிக்கை தொடர்பாக அனைவருக்கும் தெரியும். ஆகையால் அந்தக் காலப்பகுதியில்தான் இவரை கைதுசெய்திருக்க வேண்டும். இது சின்ன விடயம் தான். ஆனால் எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.
ஊழல்வாதிகள், அரச பணத்தை மோசடி செய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும். நாம் அரசாங்கம் என்ற வகையில் பொலிஸாருக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்கவில்லை-என்றார்.
