உலகம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை!
வலதுசாரி இளைஞர் ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய சகாவுமான சார்லி கிர்க் (Charlie Kirk), உட்டா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
உட்டா பல்கலைக்கழகத்தில் (Utah Valley University) நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது, இனந்தெரியாத நபர் ஒருவர் கிர்க் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் ஒரு “அரசியல் படுகொலை” என்று உட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், தாக்குதலுக்கான சரியான நோக்கம் இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.
இந்தச் சம்பவம், அமெரிக்காவில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட, பல அரசியல் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது சமூக ஊடக தளத்தில் கிர்க்கின் உயிரிழப்பை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “சார்லி கிர்க் ஒரு சிறந்த மற்றும் புகழ்பெற்ற மனிதர்” என்று அவர் குறிப்பிட்டு, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.முதலில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானாலும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி டிரம்ப் மீது இரண்டு கொலை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தத் துயரமான நிகழ்வு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறைகள் பற்றிய கவலையை மீண்டும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[ஒ]
