இலங்கை
பெண்கள் மீதான வன்முறைகளை மூடிமறைப்பதால் சிறுவர்கள் பாதிப்பு; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
பெண்கள் மீதான வன்முறைகளை மூடிமறைப்பதால் சிறுவர்கள் பாதிப்பு; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களுக்கெதிராக நடக்கும் அநீதிகள் அதிகம். ஆனால் அவற்றைத் துணிந்து வெளியில் கூறுவதற்குப் பலரும் தயங்குகின்றனர். இதனால் அவர்களது பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் தங்களுக்கு நடக்கும் வன்முறைகளைத் துணிந்து வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண மகளிருக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட 10 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இலங்கையில் பாலியல்
துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றைவிடக் கூடுதலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். பெண்கள் மீதான வன்முறைகளை அவர்களே மறைப்பதனால் பல சம்பவங்கள் தெரியாமலேயே போய்விடுகின்றன.
பெண்கள் குடும்பத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் எனப் பல இடங்களிலும், பலவழிகளில் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.போதைக்கு அடிமையானவர்களாலும், பெண்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். தமது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதொரு சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் – என்றார்.
