இந்தியா
ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்: குப்பை அகற்றும் பணியில் அலட்சியம் கூடாது- தனியார் நிறுவனத்திற்கு முதல்வர் ரங்கசாமி கடும் எச்சரிக்கை
ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்: குப்பை அகற்றும் பணியில் அலட்சியம் கூடாது- தனியார் நிறுவனத்திற்கு முதல்வர் ரங்கசாமி கடும் எச்சரிக்கை
புதுச்சேரி: குப்பைகளை அகற்றும் பணியைச் சரியாகச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை சார்பில், ‘தூய்மையே சேவை 2025 மற்றும் தூய்மைத் திருவிழாவின்’ நிறைவு நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 2, 2025) பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். தூய்மைப் பணியில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.சரியாக வேலை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து! நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் குப்பை அகற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.”அந்த நிறுவனம் அகற்றும் குப்பைக்கு எடை கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, குப்பை அள்ளும் பணியை அந்த நிறுவனம் சரியாக மேற்கொள்ளவில்லை என்றால், அதன் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கிறேன். குப்பை அள்ளும் பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குச் சரியான முறையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பும், அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.தூய்மைப் பணியாளர்கள் திடீரென்று வேலைநிறுத்தம் செய்கிறார்கள். அதனால் குப்பை அகற்றப்படாமல், புதுச்சேரியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பணியினைச் செய்து கொண்டே, தங்களது நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்,” என்று அவர் பணியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் சரத் சௌகான், உள்ளாட்சித் துறைச் செயலர் கேசவன், இயக்குநர் சக்திவேல் உட்படப் பொதுமக்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
