இலங்கை
பொலித்தீன் பைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
பொலித்தீன் பைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
பொலித்தீன் ஷொப்பிங் பைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, நவம்பர் 1 ஆம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் நேற்று (01) உயர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டது.
சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு வரி விதிக்கப்படும் என 2024 மார்ச் 28 ஆம் திகதி உயர் நீதிமன்றில் பிரதிவாதிகள் இணக்கம் வெளியிட்டிருந்ததாகவும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே தெரிவித்தார்.
இந்த வழக்கு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, “நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
