இலங்கை
வடக்கு மாகாணத்தில் இவ்வருடத்தின் இறுதிக்குள் போதை மறுவாழ்வு மையம்!
வடக்கு மாகாணத்தில் இவ்வருடத்தின் இறுதிக்குள் போதை மறுவாழ்வு மையம்!
வடக்கு மாகாணத்தில் உயிர்க்கொல்லிப் போதைப் பொருளுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏதாவது ஓரிடத்தில் மறுவாழ்வு நிலையத்தை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப் பொருளுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் மறுவாழ்வு நிலையத்தையும் உதவிநாடும் நிலையத்தையும் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநரின் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பங்கேற்புடன், கடந்த ஜூலை மாதம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முன்னேற்றங்கள் தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவில் காணி ஒதுக்கப்பட்டு இதுதொடர்பான கடிதம் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். புனர்வாழ்வு நிலையம் நிரந்தரமாக அமைக்கப்படும் வரை கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் அல்லது முல்லைத்தீவில் அதை இயக்குவது தொடர்பாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அங்குள்ள கட்டடங்கள் தொடர்பாக முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுவினரும், வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் கீழான குழுவினரும் இணைந்து களப்பயணம் மேற்கொள்வதெனவும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஓரிடத்தில் புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் குருநகரிலும், முல்லைத்தீவில் ஒட்டுசுட்டானிலும், மன்னாரில் முருங்களிலும் அமைந்துள்ள மருத்துவமனைகளில் உதவி நாடும் நிலையங்கள் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. குருந்கூர் மருத்துவமனையின் திருத்த வேலைகள் நிறைவுறுவதற்குக் கால அவகாசம் தேவை என்பதால் அதுவரை பிறிதொரு மருத்துவமனையில் உதவிநாடும் நிலையம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் மற்றும் முருங்கன் மருத்துவமனைகள் தயார் நிலையிலுள்ளமையால் அவற்றில் உடனடியாக உதவி நாடும் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் வி.பி.எஸ். டி.பத்திரன, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணச் சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், யாழ். மாவட்டச் செயலர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர்கள், யாழ்ப்பாணப் பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
