இந்தியா
கரூர் சம்பவத்தை அரசியலாக்கும் இ.பி.எஸ்: புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் குற்றச்சாட்டு
கரூர் சம்பவத்தை அரசியலாக்கும் இ.பி.எஸ்: புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் குற்றச்சாட்டு
புதுச்சேரியின் மண், மொழி, மானம் காக்க, தி.மு.க சார்பில் உடன்பிறப்பே வா பரப்புரை நிகழ்வு மற்றும் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளைக் உறுப்பினர்களாக சேர்க்கை நிகழ்வு புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., கலந்து கொண்டு உருளையன்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, உப்பளம், ராஜ்பவன் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகத்ரட்சகன், “வளமான புதுச்சேரி, வலிமையான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் இன்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது. புதுச்சேரி என்றுமே தி.மு.க கோட்டை தான். மேலும் அதை வலிமைப்படுத்த அனைத்து தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்திருக்கிறோம். கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், அதனை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரசியலாக்கி வருகிறார். தி.முக-வில் எழுச்சியை பார்க்கும்போது எனக்கு 20 வயது குறைந்து போய் இருக்கிறது. எந்த குடும்பத்தில் எந்த தொண்டன் இறந்தாலும் அவர்கள் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று நினைத்து வருத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்” என்று அவர் தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
