இந்தியா
தீபாவளிக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பால் பலரும் ஹேப்பி!
தீபாவளிக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பால் பலரும் ஹேப்பி!
நாடு முழுவதும் வருகிற திங்கள்கிழமை (அக்டோபர்.20) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ‘தீபாவளிக்கு மறு நாளும் அரசு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும், ஊருக்குச் சென்றுவர அது பயன்படும்’ என்று அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவ ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி வருகிற 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகிற நவம்பர் மாதம் 15-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. ஏனாம் பிராந்தியங்களுக்கு இது பொருந்தாது. தமிழ்நாட்டிலும் இதேபோல் தீபாவளிக்கு மறுநாள் (21-ந் தேதி) விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
