இலங்கை
மகிந்தவின் குடும்பத்தில் சிக்கவுள்ள முக்கிய புள்ளி ; வெகு விரைவில் மிகப்பெரிய கைது
மகிந்தவின் குடும்பத்தில் சிக்கவுள்ள முக்கிய புள்ளி ; வெகு விரைவில் மிகப்பெரிய கைது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பசில் ராஜபக்ஷ, 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கையூட்டல், ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த முறைப்பாடுக்கு அமையவே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரச வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விபரங்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2010 ஜூன் முதல் 2014 நவம்பர் மாத காலப்பகுதியில், பசில் உள்நாட்டுப் பயணங்களுக்காக வான்படை வானூர்திகளை பயன்படுத்தியதாகவும், ‘மக நெகும’ திட்டத்திலிருந்து சுமார் 16 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட மூன்று சொகுசு வாகனங்கள் உட்பட ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் 11 ஏனைய வாகனங்களைப் பயன்படுத்தியதன் மூலம், அரசுக்கு 61 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2010 ஜனவரி 10 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை, 64 கடற்படை வீரர்களும் மற்றும் 84 இராணுவ வீரர்களும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டதாகவும், அவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக 26 கோடிக்கும் அதிக ரூபாய் அரச நிதியிலிருந்து செலவிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
