இலங்கை
புதிய ஆய்வின் அதிர்ச்சி தகவல் ; இளம் வயதினரிடையே அதிகரிக்கும் மாரடைப்பு
புதிய ஆய்வின் அதிர்ச்சி தகவல் ; இளம் வயதினரிடையே அதிகரிக்கும் மாரடைப்பு
உலகெங்கிலும் முதியவர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது குறைந்திருந்தாலும், 50 வயதிற்குட்பட்ட இளம் வயதினரிடையே மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
செஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic) இதழின்படி, இது ஒரு அபாயகரமான போக்கு என பல மருத்துவர்களால் கருதப்படுகிறது.
மேலும் இது பொது சுகாதார அவசரநிலையாகவும் கருதப்படுகின்றது.
அமெரிக்கத் தேசிய சுகாதார புள்ளிவிபர மையத்தின்படி, அங்கு 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 2019 ஆம் ஆண்டில் சுமார் 0.3% பேருக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் 2023 ஆண்டில் குறித்த எண்ணிக்கை 0.5% ஆக உயர்ந்துள்ளது.
இது நான்கு ஆண்டுகளில் 66% அதிகரிப்பாகும்.
2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் 2 மருத்துவமனைகளில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேரில் ஒருவர் (20%) 40 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 2% வீதம் அதிகரித்து வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதியவர்களைப் போலவே, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 40 வயதிற்குக் குறைவானவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது பிற காரணங்களால் இறப்பதற்கான வாய்ப்பு சமமாக இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
2020 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் இளம் வயதினர் மத்தியில் இதய நோய்கள் அதிகரித்ததால், அமெரிக்காவின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 4% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
மிக அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் இந்த பிரச்சினையை மேலும் வெளிப்படுத்தின.
2024 இல் நியூயோர்க் நகரில் நடைபெற்ற டிரையத்லான் (Triathlon) ஓட்டப் போட்டியில் 38 வயதுடைய ஆண் ஒருவர் திடீரென மாரடைப்பினால் சரிந்தார்.
அதேபோல, 2023 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸின் மகன் ப்ரோனி ஜேம்ஸ் (18) கூட பயிற்சியின் போது மாரடைப்பினால் பாதிக்கப்பட்டார்.
புதிய ஆதாரங்களின் படி, இளம் வயதினர் மத்தியில் இதய சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக நெஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கை கூறுகிறது.
இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், குறிப்பாக சரியான உணவுப் பழக்கம் இல்லாதது மற்றும் உடற்பயிற்சியின்மை. கொவிட்-19 தொற்றுகளும் இந்த நிலையை மேலும் மோசமாக்குவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் என்பனவும் முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன.
இவை அனைத்தும் இதயத்திற்கு ஒட்சிசன் கொண்ட இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்களை அடைப்பதற்கும் சேதப்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றன.
பொதுவாக மாரடைப்பு ஆண்களை அதிகமாகப் பாதித்தாலும், சமீபத்திய ஆய்வுகள் இளம் பெண்களே அதிக விகிதத்தில் மாரடைப்புகளை எதிர்கொள்வதாகவும், மேலும் அவர்களின் விளைவுகள் மோசமாக இருப்பதாகவும் காட்டுகின்றன.
35 முதல் 54 வயதுக்குட்பட்டவர்களில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்த 2018 ஆம் ஆண்டின் ஆய்வில், இளம் ஆண்களின் அனுமதி 30% லிருந்து 33% ஆக அதிகரித்தபோது, இளம் பெண்களின் அனுமதி 21% லிருந்து 31% ஆக அதிக அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
