பொழுதுபோக்கு
உனக்கு எத்துப்பல், க்ளோசப் வைத்தால் சிரிப்பார்கள்; படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் சந்தித்த அவமானம்: வைரமுத்து ப்ளாஷ்பேக்
உனக்கு எத்துப்பல், க்ளோசப் வைத்தால் சிரிப்பார்கள்; படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் சந்தித்த அவமானம்: வைரமுத்து ப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை மக்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார். அன்று முதல் இன்று வரை நல்ல மனிதருக்கு இலக்கணமாக எம்.ஜி.ஆர் அமைந்துள்ளார்.சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை. அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தை இயக்கி தயாரித்து, நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்தார். இன்று வரையிலும் பலரும் எம்.ஜி.ஆரை போன்று உதவி செய்து பழகுங்கள் என்று சொல்லி வருகின்றனர். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் முதல் படத்தின் போது அவருக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். அவர் பேசியதாவது, ”இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமான ‘சதி லீலாவதி’ படத்தில் தனக்கு க்ளோஷப் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.அதற்கு இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன், உன் பள்ளு எத்துப்பல்லாக இருக்கிறது. உனக்கு க்ளோசப் போட்டால் எல்லோரும் சிரித்துவிடுவார்கள். எனக்கு இயக்கம் தெரியவில்லை என்று தயாரிப்பாளர் என்னை துரத்திவிடுவார். உனக்கு க்ளோசப் போட முடியாது என்று சொல்லி எம்.ஜி.ஆரை அனுப்பியுள்ளார். எந்த முகத்துக்காக தமிழ்நாடு காத்திருந்ததோ, எந்த முகத்திற்காக தமிழ்நாட்டையே மக்கள் எழுதி வைத்தார்களோ, எந்த முகத்திற்காக பாமரன் பத்து மணிநேரம் காத்திருந்தானோ, எந்த முகத்திற்காக வீட்டு கதவுகள் காத்திருந்ததோ, எந்த முகத்திற்காக சுவரொட்டிகள் கிழிக்கப்படாமல் இருந்ததோ அந்த முகத்தின் சொந்தக்காரருக்கு கிடைத்த முதல் வெகுமானம் அவமானம்” என்றார்.
