இலங்கை
முதலீட்டுக் கொள்கையில் முரண்பட்ட தன்மைகள்; அமெ. இராஜாங்கத் திணைக்களம் அதிருப்தி!
முதலீட்டுக் கொள்கையில் முரண்பட்ட தன்மைகள்; அமெ. இராஜாங்கத் திணைக்களம் அதிருப்தி!
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுகின்றது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப்பின்னணி தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இதுதொடர்பில் பல முக்கியமான விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய மக்கள்சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒத்துழைத்து முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தாலும், அரசாங்கத்தின் பழைய மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச செல்வாக்குக் கொண்ட சித்தாந்தங்கள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் சந்தேகத்துடன் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுகின்றது என்று கூறும் அமெரிக்கா இலங்கை முதலீட்டுச்சபை பிரதான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் என்றபோதும், அவர்களுடன் நிலையான மற்றும் வெளிப்படையான உரையாடலைப் பேணுவது சவாலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தேவையற்ற கட்டுப்பாடுகள், சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளின் பலவீனமான பதிலளிப்பு போன்றவையும் இலங்கையில் முதலீடுசெய்வதற்கு உள்ள ஏனைய பிரச்சினைகளாக அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
