இந்தியா
போதையில்லா இந்தியா; அக்டோபர் 31 முதல் ஒற்றுமை பேரணி: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
போதையில்லா இந்தியா; அக்டோபர் 31 முதல் ஒற்றுமை பேரணி: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்தநாளையொட்டி ஒற்றுமை பேரணி இந்திய நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி புதுச்சேரியிலும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை இந்த பேரணி நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை பேரணி நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தேசத்தின் ஒற்றுமை தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் ஒரு விழிப்புணர்வு பேரணியாக இருக்கும்.போதையில்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கருப்பொருள் மற்றும் கலாச்சார பன்பாட்டை இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த பேரணி அமையும். மேலும் இந்திய நாட்டில் தயாரிக்கின்ற பொருளை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். பேரணியில் அனைவரும் கலந்துகொள்வதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா அக்டோபர் 6-ம் தேதி மை பாரத் என்ற ஒரு போர்ட்டலை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்கள் பதிவு செய்ய ஏதுவாக அறிமுகப்படுத்தி உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஒருங்கிணைத்து பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம். மேலும் பள்ளிக் கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த இடத்தில் உள்ள ஒற்றுமை சிலை அருகே 152 கிலோ மீட்டர் பேரணி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஒற்றுமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்த பேரணியின் முக்கிய மைய கருத்தாக உள்ளது” என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜந்திரன் – புதுச்சேரி.
