இலங்கை
அரசியல்மயமாகியுள்ளது பொலிஸ் திணைக்களம்; இப்படிக் கூறுகின்றார் நாமல்!
அரசியல்மயமாகியுள்ளது பொலிஸ் திணைக்களம்; இப்படிக் கூறுகின்றார் நாமல்!
பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார். பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
மக்கள் பிரதிநிதி ஒருவரை பகிரங்கமாகச் சுட்டுக்கொலை செய்யும் நிலையே தற்போது உள்ளது. இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கொலைகளையும் அரசாங்கம் பாதாளக் குழுக்களின் கணக்கில் சேர்க்கிறது. எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களும் பாதாளக்குழுக்களுடன் தொடர்புபட்டுள்ளனர் என்று மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டையும் அரசாங்கம் ஏற்படுத்துகின்றது.
323 கொள்கலன்கள் எங்கு சென்றது என்பது இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இலங்கைக்கு இரண்டு கொள்கலன்களில் ஐஸ் போதைப்பொருள் வருகின்றது என்று சர்வதேச புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்குத் தகவலளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறது – என்றார்.
