இலங்கை
இலங்கையில் இதுவரை வீதி விபத்துகளில் 2,343 பேர் பலி ; மக்களே அவதானம்
இலங்கையில் இதுவரை வீதி விபத்துகளில் 2,343 பேர் பலி ; மக்களே அவதானம்
இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்ளர் தெரிவித்துள்ளார்.
நேற்று பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பண்டிகை காலங்களின் போது வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்களுக்காக செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பாடசாலை விடுமுறை என்பதாலும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் பெருமளவானோர் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
அவ்வாறு குடும்பங்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வோர் வாகனங்களின் தன்மை, சாதி மற்றும் வானத்தின் இயந்திரம் தொடர்பிலும் அவதானம் செலுத்துவது அவசியம்.
கவனயீனம், அவதனம் இன்மை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துதல் ஆகியன உங்கள் அன்புக்குறியவர்களின் உயிருக்கு பாதகமாக அமையலாம்.
இவ்வாறன விடயங்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அறிவியுங்கள். அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4360 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
விபத்துகளால் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பை கருத்திற் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
கவனயீனமாகவும், மது போதையுடனும் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
