இலங்கை
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ; யாழில் கைதானவர்களுடன் சிக்கிய அப்பாவி ஜீவன்
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ; யாழில் கைதானவர்களுடன் சிக்கிய அப்பாவி ஜீவன்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அதனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது, பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு, பின்னர் கார் ஒன்றில் ஏறி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்றிருந்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரினை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு, பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர்.
அதனடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த GPS உதவியுடன் காரினை கண்காணித்த வேளை கார், மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பினைச் சேர்ந்த பொலிஸ் குழு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர், காரினை மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர்.
அதனை அடுத்து காரினை மீட்ட பொலிஸார் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன், அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயினையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றிருந்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், காரினை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதனை பொலிஸார் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர்.
அதேவேளை காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர். காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும், கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்ட ஆணொருவரின் காதலி எனவும் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
