இந்தியா
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு; அடுத்த ஆண்டு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு; அடுத்த ஆண்டு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு குறித்து விரைந்து விசாரித்து முடிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரருக்கும், வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சாட்சி இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் சிங்வி கூறினார்.
மனுதாரர் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், “உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கலாமே” என்று கூறினர். இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் தரப்பு, “உச்சநீதிமன்றம் விசாரித்தால் வேறு எந்த நீதிமன்றமும் தலையிடாது” என்றனர்.
வழக்கில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இல்லை என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தனர். இதனைக்கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை 2025ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.