இந்தியா
ஊழல் குற்றச்சாட்டு : அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி

ஊழல் குற்றச்சாட்டு : அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி
இலங்கையின் தலைநகர் கொலோம்போ துறைமுகத்தில் அதானி குழுமம் கட்டவிருந்த முனையத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் நிதி வழங்கவிருந்த நிலையில், அதனை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் கௌதம் அதானி மற்றும் 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது. அதில் இந்திய அரசாங்கத்திற்கு சூரிய ஒளி மின்சாரம் விநியோகிப்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு ஏறத்தாழ ரூ.2000 கோடி லஞ்சமாக கொடுக்க திட்டமிட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றன.
இலங்கை தலைநகரம் கொலோம்போவில் உள்ள துறைமுகத்தில் அதானி குழுமம், இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக நிர்வாகம் இணைந்து கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் எனப்படும் கொள்கலன் முனையத்தை (Colombo West International Terminal) கட்ட கடந்த வருடம் முடிவு செய்தனர்.
இதற்கு அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் 533 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.4370 கோடி) கடனாக வழங்க இருந்தது.
ஆனால் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த திட்டத்திற்கு நிதி வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்து வருகிறோம் என்று அந்நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தான் அதானி குழுமம் இந்த கொள்கலன் திட்டத்திற்கு தனது சொந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக நேற்று (டிசம்பர் 10) இரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் கடன் பத்திரம் மூலமாக சுமார் ரூ.4920 கோடி நிதி திரட்ட இருந்த அதானி, தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால், அதை நிறுத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.