இந்தியா
நெல்லைக்கு ரெட் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை!

நெல்லைக்கு ரெட் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை!
திருநெல்வேலி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 54 செமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில் இன்றும் (டிசம்பர் 13) நெல்லைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 13) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (13-12-2024) லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.
நாளை (14-12-2024) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
13-12-2024: திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை பாதிப்பு… உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை!