இலங்கை
வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்ட தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்ததினம்!

வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்ட தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்ததினம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் மற்றும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு தலைவர். மேதகு. பிரபாகரனுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கண்டுகள் வழங்கியும் எழுச்சியான முறையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விவுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரனின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் அவரின் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்தினர்.
மேலும், நிகழ்வினை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய வீடு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், 70 தென்னை மரக்கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)