இந்தியா
Savukku Shankar | பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது – கஞ்சா வழக்கில் ஆஜராகாததால் போலீசார் நடவடிக்கை

Savukku Shankar | பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது – கஞ்சா வழக்கில் ஆஜராகாததால் போலீசார் நடவடிக்கை
சவுக்கு சங்கர் (கோப்பு படம்)
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகராக இருந்த அவர், ‘‘சவுக்கு மீடியா’’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது கார் மற்றும் உதவியாளரிடம் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதே வழக்கில் குண்டர் சட்டம் பதியப்பட்டு சில வாரங்கள் சிறையில் இருந்தார். இந்த சிறை உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தும், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தேனி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் நிலுவையில் இருந்த நிலையில், சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.