உலகம்
ரஷ்ய வீரர்களை எதிரிகளாக தவறுதலாக கருதி சுட்டு தள்ளிய வடகொரிய வீரர்கள்!

ரஷ்ய வீரர்களை எதிரிகளாக தவறுதலாக கருதி சுட்டு தள்ளிய வடகொரிய வீரர்கள்!
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா 2022ம் ஆண்டு பெப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு உள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டாக கூறியிருந்தது. அது உண்மை என அடுத்தடுத்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த போரில் ரஷ்ய படை வீரர்களை, அதன் கூட்டணி நாடான வடகொரியாவின் வீரர்களே தவறான புரிதலால் சுட்டு கொன்ற அவலம் நடந்துள்ளது.
குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷ்ய படைகள் ஈடுபட்டு இருந்தன. ஆனால், அதனால் எதிரி படைகளை எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், ரஷ்ய படையினரின் உத்தரவுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத சூழலில் வடகொரியா வீரர்கள் இருந்துள்ளனர். இதனால், ரஷ்ய வீரர்களை தவறுதலாக எதிரிகள் என அவர்கள் நினைத்துள்ளனர். அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரஷ்ய வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரஷ்யாவுக்கு இந்த ஒரு விசயம் மட்டுமே முக்கிய சவால் என்றில்லாமல், உக்ரைனுக்கு வடகொரிய வீரர்களை அழைத்து வந்ததில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில், உத்தரவுகளை வீரர்கள் சரியாக புரிந்து கொள்ளாத இந்த விசயமும் அடங்கும்.