இந்தியா
Weather Update: ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Weather Update: ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
அதேபோல போரூர், பூந்தமல்லி, குன்றத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வண்டலூர், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான பொறையார், திருக்கடையூர், அக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை, ஏலூர், சிவகிரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியதால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த மழையால் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. தேங்கிய மழை நீரில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.