
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 30/12/2024 | Edited on 30/12/2024
மலையாளத்தில் அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் திலீப் சங்கர். இதை தவிர்த்து சப்பா குரிஷு, நார்த் 24 காதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சின்னத்திரை தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கடந்த 19 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால் அவர் அந்த அறையை விட்டு சில நாட்களாக வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் படக்குழுவினர் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் சொல்ல, பின்பு அவர்கள் திலீப் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது அவர் சடலமாக கிடந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திலீப்பின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் இறந்து இரண்டு நாட்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் மரணத்தில் சந்தேகம் படும்படி எந்த தகவலும் இல்லை என சொல்லப்படுகிறது. இவரது மரணம் மலையாளத் சின்னத் திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்து பல சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
