இலங்கை
பஸ் கட்டணங்கள் ஜூலை உயரலாம்; அபாயச்சங்கு ஊதும் கெமுனு விஜயரத்ன!

பஸ் கட்டணங்கள் ஜூலை உயரலாம்; அபாயச்சங்கு ஊதும் கெமுனு விஜயரத்ன!
எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களால் பஸ் கட்டணத்தைக் குறைப்பது கனவாக மாறியுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதத்தின் பின்னர் பஸ் கட்டணங்களை உயர்த்தவேண்டி ஏற்படும் என்று லங்கா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் எரிபொருள் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். புத்தாண்டின் தொடக்கத்தில் எரிபொருள் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கை இப்போது கனவாக மாறியுள்ளது.
பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமானால் கொள்கைக் கணக்கீட்டின்படி டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 30 ரூபாவால் குறைக்க வேண்டும். அதேநேரம் உதிரிப்பாகங்கள் மற்றும் இதர உபகரணங்களின் விலைகளும் குறையவேண்டும்.
தனியார் பஸ் சேவை தற்போது நெருக்கடி மிக்க நிலையில் உள்ளது. அதனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் செலவுகளை நிர்வகிக்க பஸ் கட்டணங்களைக் கணிசமாக உயர்த்தவேண்டி ஏற்படும்.
சாதாரண புதிய பஸ் ஒன்றின் விலை 16 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதன் பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்தநிலைமை தவிர்க்க முடியாத கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் – என்றார்.