இலங்கை
கள்ளக்காதலுடன் ஏற்பட்ட தகராறு… பரிதாபமாக உயிரிழந்த 4 வயதான சிறுவன்!

கள்ளக்காதலுடன் ஏற்பட்ட தகராறு… பரிதாபமாக உயிரிழந்த 4 வயதான சிறுவன்!
நுவரெலியா – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவன் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 4 வயதான தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் தாயொருவர், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் நேற்று (16-01-2025) மாலை குதித்திருந்தார்.
இதனையடுத்து குறித்த தாய் நேற்றையதினமே மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, சிறுவன் காணாமல் போயிருந்த நிலையிலேயே இன்றையதினம் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
41 வயதான குறித்த பெண் கணவரை பிரிந்து பூண்டுலோயா பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாழ்ந்துள்ளார்.
அந்நபர் மற்றுமொரு திருமணம் செய்துகொள்வது தொடர்பில் எழுந்த பிரச்சினையாலேயே இப்பெண் உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மரண விசாரணைகளின்பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.