உலகம்
ஹெலியும் விமானமும் விபத்து: கருப்புப்பெட்டி மீட்பு!

ஹெலியும் விமானமும் விபத்து: கருப்புப்பெட்டி மீட்பு!
இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்துக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் (29) இரவு (இலங்கை நேரப்படி நேற்று காலை) புறப்பட்டது.
விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பிளாக் ஹாக் ஹெலிகொப்டர் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஹெலிகொப்டரில் 3 இராணுவ வீரர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், தரையிறங்க முன்ற பயணிகள் விமானமும், புறப்பட்ட இராணுவ ஹெலிகொப்டரும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரும், விமானமும் போடோமாக் ஆற்றில் விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் பயணிகள் விமானத்தில் பயணித்த 64 பேர், ஹெலிகொப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 28 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் சடலங்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, விமானத்தின் கருப்புப்பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கருப்புப்பெட்டியை முழுமையாக ஆய்வு செய்தபின்னரே இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.