விளையாட்டு
முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக இடைநிறுத்தம்!

முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக இடைநிறுத்தம்!
இலங்கை – தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான முதலாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக 20.4 பந்துப்பரிமாற்றங்களுடன் முடிவுக்கு வந்தது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா மதிய இடைவேளைக்கு சற்று முன்னர் மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 4 இலக்குகளை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஏய்டன் மார்க்ராம் 9 ஓட்டங்களுடனும், டோனி டி ஸோர்ஸி 4 ஓட்டங்களுடனும் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தனர்.
அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் மார்க்ராமின் பிடியை ஏஞ்சலோ மெத்யூஸும் விஷ்வா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் டி ஸோர்ஸியின் பிடியை கமிந்த மெண்டிஸும் எடுத்தனர்.
தொடர்ந்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 16ஓட்டங்களுடனும், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் 3ஆவது இலக்கில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஸ்டப்ஸ் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் திமுத் கருணாவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்த போது லஹிர குமாவின் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாம் 4 ஓட்டத்துடன் போல்ட் ஆனார். இதேவேளை, ஏஞ்சலோ மத்யூஸ் மிகத் துல்லியமாக இரண்டு ஓட்டமற்ற பந்துப்பரிமாற்றங்களை வீசியிருந்தார். மதிய இடைவேளைக்குப் பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் மாலை 3 மணியளவில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். ஆட்டும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது தென்னாபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா 28 ஓட்டங்களுடனும் கய்ல் வெரின் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் விஷ்வா பெர்னாண்டோ 17 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கையும் கைப்பற்றியிருந்தமை குரிப்பிடத்தக்கது.