உலகம்
பங்களாதேஷில் தொடரும் போராட்டம் – இந்து கோயில்கள் மீது தாக்குதல்!

பங்களாதேஷில் தொடரும் போராட்டம் – இந்து கோயில்கள் மீது தாக்குதல்!
பங்காளதேஸில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை பொலிஸார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் சிட்டகாங் நகரில் உள்ள உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்தது. மேலும் 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றம் முன்பு ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பொலிஸார் தாக்கதலை மே்றகொண்டு, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்- பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் இந்துக்கள் மீது ஒரு குழுவினரும் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்த நிலையில் அரச தரப்பு நீதிபதி சைபுல் இஸ்லாம் ஆரிப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இக்கொலையை கண்டித்து நீதிபதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 24 மணிநேர கெடு விதித்தனர். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே சிட்டகாங்கில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
சிட்டகாங்கின் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோவில், மான்சா மாதா கோவில்,ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோவில் ஆகிய கோவில்களின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது.
இதற்கிடையே தாக்கூர் கான் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
இதற்கிடையே மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்தவிதமான விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குறிப்பிட்டுள்ளார்.