இந்தியா
உபி இளைஞரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! வாக்குமூலத்தில் பகீர்!

உபி இளைஞரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! வாக்குமூலத்தில் பகீர்!
சென்னை தாம்பரம் அடுத்த கிருஷ்ணா நகர் முல்லை தெருவில் வசித்து வருபவர் மோகன் குமார். கார் ஓட்டுநரான மோகன்குமார், இரவு பகல் பாராமல் கார் ஓட்டி சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து ஆறு மாதங்களுக்கு முன்பு நான்கு சவரன் தாலி சங்கிலியை வாங்கி தனது மனைவி பிரியங்காவிற்கு கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் பிரியங்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி இருக்கிறார். பிரியங்கா வெளியே வந்ததும் அந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை பிரியங்கா முகத்தில் வீசி அவரை நிலைகுலைய செய்துள்ளார்.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரியங்கா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்து இருக்கிறார். ஆனால் பிரியங்கா இறுக்கமாக தாலியை பிடித்துக் கொண்டதால் செயின் இரண்டாக அறுந்து, தாலி பிரியங்கா கையிலும், செயின் கொள்ளையன் கையிலும் சிக்கி விட்டது. கிடைத்த வரை லாபம் என்று செயினுடன் அவர் தப்பிச் செல்ல, பிரியங்கா கூச்சலிட்டு அபயக்குரல் எழுப்பி இருக்கிறார்.
உடனே அருகே இருந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது அவர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார். செயின் பறிப்பு சம்பவம் குறித்து பெருங்களத்தூர் காவல் நிலையத்தில் உள்ள குற்றப் பிரிவு போலீசாரிடம் பிரியங்கா புகார் அளிக்க, போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மர்ம நபரின் அங்க அடையாளங்களை குறித்து விசாரித்ததில் பிரியங்கா வீட்டின் பக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம் மிலன் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ராம்மிலன் சொந்த ஊருக்கு செல்வது தெரியவர, உடனடியாக தாம்பரம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ராம்மிலனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து பெருங்களத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பிரியங்காவிடம் இருந்து பறித்த தங்கச் செயினையும் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ராம்மிலனின் மனைவி தங்கச் செயின் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், இதனால் ஊருக்கு செல்வதற்கு முன்பு, பக்கத்து வீட்டு பெண்ணிடம் செயின் பறித்ததாகவும் ராம்மிலன் வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். செயின் பறித்தவரை ஆறு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.