திரை விமர்சனம்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்பட விமர்சனம்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்பட விமர்சனம்.
சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜிகர்தண்டா உலகிற்கு வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். முந்தைய பாகத்தை விட இதில் கூடுதல் கற்பனை திறனை பயன்படுத்தியிருக்கிறார்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘. இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து, அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது என்றே சொல்லலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
ஜிகர்தண்டாவை போன்றே ஜிகர்தண்டா டபுள்க எக்ஸ் படத்திலும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி கதை நகர்கிறது. ஒருவர் இயக்குநர், மற்றொருவர் மோசமான கேங்ஸ்டர். 1970களில் நடப்பது போன்று காட்டியிருக்கிறார்கள். முதலில் மதுரையில் துவங்கும் கதை பின்னர் காட்டுப் பகுதி நோக்கி நகர்கிறது.
மதுரையில் இருக்கும் பயங்கரமான கேங்ஸ்டர் சீசரை(ராகவா லாரன்ஸ்) அறிமுகம் செய்து வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பிரபல ஹாலிவுட் நடிகரான கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகன் அந்த சீசர். அதனால் தன் தியேட்டரில் ஈஸ்வுட்டின் படங்களை மட்டுமே திரையிடுகிறார். ஹீரோவாகி, ஈஸ்ட்வுட் பட பாணி படங்களில் நடிக்க விரும்புகிறார் சீசர்.
சத்யஜித் ரேயின் உதவியாளர் என்று சொல்லும் ரே தாசனுக்கு(எஸ்.ஜே. சூர்யா) சீசரின் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ரே தாசனின் நோக்கம் படம் இயக்குவது மட்டும் அல்ல என்பது சீசருக்கு தெரியாது.
கதை நகர நகர, சீசரின் வாழ்க்கையை ரே தாசன் படமாக்க எதிர்பாராத விஷயங்களை எல்லாம் இருவரும் கண்டுபிடிக்கிறார்கள்.
சினிமாவின் ஃபவரை மீண்டும் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் திரைக்கதையில் வலுவில்லாததால் இடைவேளைக்கு பிறகு சுவாரஸ்யம் குறைகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அரசியல் அதிகார போராட்டங்கள், கேங்ஸ்டர்களின் உலகம் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுகிறது படம். ஆனால் அந்த உலகிற்குள் ரசிகர்களை முழுவதுமாக ஈர்க்க போராடுகிறது படம்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் அருமை. இடைவேளை காட்சி அற்புதம். அந்த காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டைலில் நம்மை கவர்ந்துவிட்டார். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். தியேட்டரில் இருப்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் இரண்டு பாடல்கள் கை கொடுக்கவில்லை. திரைக்கதை வலுவில்லாவிட்டாலும் விஷுவல் ட்ரீட்மென்ட்டும், கார்த்திக் சுப்புராஜின் கலை ஆர்வமும் படத்தை காப்பாற்றுகிறது.
இரண்டாம் பாதி பெரிதாக கவரவில்லை. ஆனால் அதை எல்லாம் சரிகட்டுவது போன்று அமைந்திருக்கிறது கிளைமாக்ஸ் காட்சி.
கேங்ஸ்டராக இருந்து ஹீரோவாக மாறும் ராகவா லாரன்ஸின் நடிப்பு அற்புதம். எஸ். ஜே. சூர்யா வழக்கம் போன்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பி.ஜி.எம். சுத்தமாக கை கொடுக்கவில்லை.
டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஜிகர்தண்டாவை போன்றே வர முயன்று லைட்டா சறுக்கியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்.