Connect with us

உலகம்

பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு!

Published

on

Loading

பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு!

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது.

Advertisement

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஈரான் அரசு, “அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என பதிலடி கொடுத்திருந்தார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது.

அதுமட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. என்றாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக இரண்டு மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மறுத்தால் கடுமையான தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில், பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான 85 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அந்நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டுவதாக உள்ளது. உயர் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி மற்றும் ஐஆர்ஜிசி விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே ஆகியோர் கோட்டை வளாகத்தை சுற்றிப் பார்ப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. மேலும் அதில், ஈரானின் மிகவும் அதிநவீன ஏவுகணைகள் காண்பிக்கப்படுகின்றன. அதாவது கெய்பர் ஷேகான், காதர்-எச், செஜில் மற்றும் பாவே லேண்ட் அட்டாக் குரூஸ் ஏவுகணைகள் காட்டப்படுகின்றன. தொடர்ந்து நீண்ட, திறந்த சுரங்கப்பாதைகள் மற்றும் பரந்த குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளும் காட்டப்படுகின்றன.

மேலும் அந்த வீடியோவில், ’இன்று தொடங்கினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம்’ என்றும் ஈரான் கூறியுள்ளது. இந்த வீடியோ அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட ஈரானின் எதிரிகளாக கருதப்படும் நாடுகளுக்கு ஈரான் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரான் அரசு வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற ஏவுகணை நகரம் மற்றும் கடற்படை சுரங்கம் தொடர்பான வீடியோக்களை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன