இலங்கை
மரமுந்திரிகை உற்பத்தியில் வீழ்ச்சி!..

மரமுந்திரிகை உற்பத்தியில் வீழ்ச்சி!..
நாட்டில் 70,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில் வருடாந்தம் ஒரு இலட்சம் முதல் 1.2 இலட்சம் மெட்ரிக்தொன் வரை வீணடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மரமுந்திரிகை வீணாவதை தடுப்பதற்கு மரமுந்திரிகை பழத்தை பயன்படுத்தி வைன் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டபோதிலும் வைன் உற்பத்தி தொடர்பிலான தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அதனை கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தொடர் நட்டத்தை எதிர்நோக்கிவருவதாக கணக்காய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வு நடவடிக்கையின்மூலம் தெரியவந்துள்ளது.
2019 2023 ஆண்டுவரையான காலப்பகுதியில் அரச நிதியியல் அறிக்கை பிரகாரம் வருடாந்தம் 148 முதல் 102 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியான நட்டம், பணியாட்கள் பற்றாக்குறை, குறைந்தளவிலான பயிர்ச்செய்கை, உற்பத்தி வீழ்ச்சியடைதல் உள்ளிட்ட விடயங்கள் மரமுந்திரிகை கூட்டுத்தாபன நட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக 2025ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 13 தோட்டங்களுக்குரிய 11,965 ஏக்கர் காணிகளில் 3,449 ஏக்கர் காணியிலேயே மரமுந்திரிகை பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த கணக்காய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 2023 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையூடாக 157.81 மெட்ரிக் தொன்னிலிருந்து 60.40 மெட்ரிக் தொன்வரையான விளைச்சல் சடுதியாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அதனடிப்படையில் பார்க்கும்போது ஒரு ஏக்கருக்கு 17.64 கிலோகிராம் வரையில் மரமுந்திரிகை விளைச்சல் வீழ்ச்சி கண்டுள்ளதாக அந்த கணக்காய்வு அறிக்கையில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (ப)