பொழுதுபோக்கு
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கலைப்புலி ஜி. சேகரன் மறைவு

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கலைப்புலி ஜி. சேகரன் மறைவு
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமாக விளங்கிய கலைப்புலி ஜி சேகரன், தனது 73-வது வயதில் காலமானார். தமிழ் திரைத்துறையில் விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் ஜி. சேகரன். இதையடுத்து, எஸ். தாணுவுடன் இணைந்து கலைப்புலி ஃபிலிம்ஸின் பங்குதாரராக உயர்ந்தார். அதன்படி, கடந்த 1985-ஆம் ஆண்டில் வெளியான ‘யார்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆனார்.மேலும், 1988-ஆம் ஆண்டில் ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்ற திரைப்படத்தை கலைப்புலி ஜி சேகரன் இயக்கினார். இதன் தொடர்ச்சியாக, ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு இயக்குநராகவும் அவர் பணியாற்றினார். இவை மட்டுமின்றி விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் கலைப்புலி ஜி.சேகரன் பதவி வகித்துள்ளார்.விநியோகஸ்தர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு திறமைகளை கொண்ட ஜி. சேகரன், உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராயபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.