இலங்கை
போலி வாக்குறுதியால் அநுர வாக்கு வேட்டை

போலி வாக்குறுதியால் அநுர வாக்கு வேட்டை
மன்னார் பொதுஅமைப்புகள் சாட்டை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, போலி வாக்குறுதிகளை வழங்கியே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்ததாவது:
மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வுத் திட்டங்களை நிறுத்துமாறுகோரி பல வருடங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக இந்தச் செயற்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாங்கம் எம்மைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது வெட்கக்கேடான அரசியல் செயற்பாடாகும். மக்களினுடைய நலனை கருத்திற் கொள்ளாமல், சர்வதேச நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றமை உண்மையில் எமது மக்களை வேதனையில் தள்ளியுள்ளது.
கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் மீது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள்’ என்றும், ‘இந்தியாவின் கைக்கூலிகள்’ என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தற்போதைய ஜனாதிபதி முன்வைத்து வந்தார். அவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த ஜனாதிபதி அநுரவும் தற்போது அத்தகையதொரு பாதையிலேயே பயணிக்கின்றார்.
நடைமுறைச் சாத்தியமற்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றிபெற்று, அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றது அரசாங்கம். இவ்வாறிருக்கையில், இன்று மன்னாருக்கு மீண்டும் ஜனாதிபதி வருகின்றார். அரசியலில் அறம் மிகவும் முக்கியம். எனவே, மன்னார் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – என்றார்.