இலங்கை
அமெரிக்காவுடனான தீர்வை வரிப் பேச்சு வெற்றி – ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவுடனான தீர்வை வரிப் பேச்சு வெற்றி – ஜனாதிபதி தெரிவிப்பு
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன்
டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் இடம்பெற்றதாக தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர வரிகள் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளன.
அமெரிக்காவின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ், இலங்கைப் பொருட்களுக்கு 44 வீதம் வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் குறிப்பாக இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழிலான ஆடைத் துறையைப் பெரிதும் பாதிக்கிறது.
வோஷிங்டனில் இடம்பெற்று வரும் கலந்துரையாடல் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.