Connect with us

உலகம்

போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் குண்டு மழை!

Published

on

Loading

போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் குண்டு மழை!

லெபனானில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு காசாவில் தொடரும் தாக்குதல்களில் நேற்றும் மேலும் 22க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை கிராமம் ஒன்றில் இஸ்ரேல் நேற்று  நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்திருப்பதாக லெபனான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்த மோதலைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒரே நாளிலேயே இஸ்ரேல் அங்கு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Advertisement

மர்கபா கிராமத்தில் உள்ள சதுக்கம் ஒன்றின் மீது எதிரிகள் இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக லெபனான் அரச ஊடகம் கூறியது. அதேபோன்று தெற்கு எல்லையில் இருந்து மூன்று சிறு நகரங்களில் இஸ்ரேலிய டாங்கிகள் நேற்று தாக்குதல் நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இதில் லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கும் நீலக் கோட்டுப் பகுதியின் இரண்டு கிலோமீற்றருக்குள் இருக்கும் மார்கபே, வசானி மற்றும் கர்ப்சுபா பகுதிகளிலேயே இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் 60 நாட்களுக்குள் வெளியேற வேண்டும். இந்நிலையில் லெபனானின் எல்லையை ஒட்டிய கிராமங்களில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவத்தை அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த எல்லைப் பகுதிகளில் நடமாட்டங்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் தடை விதித்துள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தை மீறி சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் வந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. மறுபுறம் தெற்கு லெபனானில் தமது கிராமங்களுக்கு திரும்பும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த லெபனான் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பத்லல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

தெற்கு எல்லையில் போர் காரணமாக வெளியேறி இருந்த குடும்பங்கள் தமது உடைமைகளை பார்ப்பதற்காக அங்கு திரும்புவதற்கு முயன்று வருகின்றன. எனினும் எல்லைக் கிராமங்களில் இஸ்ரேலிய துருப்புகள் நிலைகொண்டிருப்பதோடு  அங்கு ஆளில்லா விமானங்களைக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுவதை தொடர்ந்து அவதானித்து வருவதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.  தமது போராளிகள் இஸ்ரேலிய எதிரிகளின் நோக்கம் மற்றும் தாக்குதல்களை கையாள்வதற்கு முழு பலத்துடன் இருப்பதாகும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை காசாவில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்தன. மத்திய காசாவில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததோடு இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆழ ஊடுருவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனைக்கு அருகிலும் வீடு ஒன்றின் மீதும் இஸ்ரேல் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு நகரான கான் யூனிஸில் மோட்டார் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் உள்ள வரலாற்று அகதி முகாம்களில் ஒன்றான நுஸைரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய பல முனை வான் தாக்குதல்களில் பல கட்டடங்கள் மற்றும் பள்ளிவாசல்களை சூழவிருக்கும் வீதிகள் சோதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுஸைரத்தின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற செல்குண்டுத் தாக்குதலில் பெண் மற்றும் ஒரு குழந்தை என இருவர் கொல்லப்பட்டிருக்கும் அதேநேரம் அருகில் இருக்கும் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் மேலும் ஐவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேலிய டாங்கிகள் நகரின் வட மேற்கை நோக்கி முன்னேறி வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 44,282க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 104,800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன