இலங்கை
கிளிநொச்சி சபைகளுக்கு தவிசாளர்களை பெயரிட்டது தமிழரசுக் கட்சி

கிளிநொச்சி சபைகளுக்கு தவிசாளர்களை பெயரிட்டது தமிழரசுக் கட்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்தச் சபைகளுக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் ஆகியோரை பெயரிட்டுள்ளது.
மேற்படி மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவு நேற்றுமுன்தினம் காலை கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையே நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தெரிவுகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதன், உப தவிசாளராக புஸ்பநாதன் சிவகுமார் ஆகியோரும், பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், உபதவிசாளராக திருமதி குணலக்சுமி குலவீரசிங்கம் ஆகியோரும், பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளராக சிவகுரு செல்வராசா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தெரிவுகள் தொடர்பிலான மாவட்டக்கிளையின் எழுத்துமூல தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.