இந்தியா
Fengal Cyclone | ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப பலி..

Fengal Cyclone | ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப பலி..
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை மாநகரம் முழுவதும் கனமழை பெய்து, பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்நிலையில், சென்னை பாரிமுனை அருகே தனியார் வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சாந்தன் என்பவர் முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மிற்கு சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தண்ணீரில் தடுமாறிய அவர், ஏடிஎம் மையத்தின் அருகே இருந்த கம்பியைத் தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் தேங்கிய மழைநீரில் சாந்தனின் உடல் மிதந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டனர்.
இதேபோல், சென்னை வேளச்சேரியில், சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த, விஜயநகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.