வணிகம்
சிங்கிள் சார்ஜ் 200 கி.மீ., சீறிப்பாயும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக் அறிமுகம்!

சிங்கிள் சார்ஜ் 200 கி.மீ., சீறிப்பாயும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக் அறிமுகம்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக்கை அதானி குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுரங்கப் போக்குவரத்திற்காக இந்த டிரக்கை பயன்படுத்த உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரில் இந்த டிரக் அறிமுகப்படுத்தப்பட்டது. 40 டன் சுமையை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த டிரக்கை, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரே பால்மா சுரங்கத்தில் இருந்து மின் நிலையத்திற்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல இந்த டிரக் பயன்படுத்தப்படும்.கார்பன் வெளியீட்டை குறைப்பதுடன், தூய்மை போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் பேட்டரியில் இயங்கும் சரக்கு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள டீசல் டிரக்குகளுக்குப் பதிலாக, படிப்படியாக ஹைட்ரஜன் டிரக்குகளைப் பயன்படுத்துவோம் என்றும், எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் பயணிக்கும் திறன் கொண்டது இந்த டிரக். 3ஹைட்ரஜன் டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டீசல் டிரக்குகளுக்கு இணையான சுமை தாங்கும் திறன் மற்றும் பயண தூரம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஹைட்ரஜன் டிரக், கார்பன் வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற மாசுபடுத்தும் வாயுக்களை வெளியேற்றும் டீசல் டிரக்குகளைப் போலன்றி, ஹைட்ரஜன் டிரக் நீராவியையும் வெப்பக் காற்றையும் மட்டுமே வெளியேற்றுகின்றன. வணிக வாகனப்பிரிவில் மிகவும் சுத்தமான தேர்வாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாகக் குறையும்.ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள், மின்வேதியியல் செயல்முறை மூலம் இயங்குகின்றன. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன், மின்சாரமாக மாற்றப்படுகின்றன. இதில் நீர் மற்றும் வெப்பம் மட்டுமே துணைப்பொருட்களாக வெளியேற்றப்படுகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் செல்லுக்குள் செல்லும்போது, புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களாகப் பிரிக்கப்படுகிறது. புரோட்டான்கள் சவ்வு வழியாகச் செல்லும்போது, எலக்ட்ரான்கள் ஒரு சுற்று வழியாக அனுப்பப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், வாகனத்தின் மின் மோட்டாருக்கு சக்தி அளிக்கிறது. இந்த செயல்பாட்டின்போது, வாகனத்திலிருந்து நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.