இலங்கை
யாழில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

யாழில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே, யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பதில் கடமை நிறைவேற்றதிகாரி பொ.ப.விஜயராஜ குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஒரு துவிச்சக்கர வண்டியும் அவரது உடமையில் இருந்து ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சில மாதங்களாக நல்லூர், யாழ். நகரபகுதி, கே.கே.எஸ்.வீதி போன்ற இடங்களிலிருந்து திருடப்பட்ட ஆண்கள் பயன்படுத்தும் ஐந்து துவிச்சக்கர வண்டிகளும் பெண்கள் பயன்படுத்தும் 11 துவிச்சக்கர வண்டிகளும் என 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துவிச்சக்கரவண்டிகளை தொலைத்த உரிமையாளர்கள் இருப்பின் தகுந்த அடையாளங்களை காண்பித்து துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.