இலங்கை
சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம்; மாநகர சபை விளக்கம்

சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம்; மாநகர சபை விளக்கம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது , அனுமதிகள் பெறப்பட வேண்டும்.
ஆனால் அனுமதிகள் பெறாமல் திறக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மூட முடியாதது. அவர்கள் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அவ்வாறே குறித்த உணவகத்திற்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் அவர்கள் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் , அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளார்கள். அவற்றினை ஆராய்ந்து அனுமதிகள் கொடுப்பதா இல்லையா எனும் முடிவு எடுக்கப்படும்.
அனுமதி கொடுக்க ஏதுவான காரணம் இல்லை எனில் , நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உணவகத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நல்லூர் ஆலய சூழலை புனித பிரதேசமாகவும் , ஆலய சூழலில் குறிப்பிட்ட சுற்று வட்ட பகுதிக்குள் அசைவ உணவகங்கள் , கோளிக்கை உள்ளிட்டவை அமைக்கப்பட கூடாது என சபையில் தீர்மானம் நிறைவேற்றி , உப விதிகளை உருவாக்கினாலே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ள்னர்.
எனவே புதிதாக சபையை அமைத்து ஆட்சி செய்யவுள்ள மாநகர சபை உறுப்பினர்கள் இது தொடர்பான தீர்மானத்தை சபையில் நிறைவேற்ற வேண்டும் என நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.