இலங்கை
தெற்கில் மட்டுமல்ல உயிரிழந்தோரை நினைவேந்துவதற்கு வடக்கு மக்களுக்கும் உரிமையுண்டு!

தெற்கில் மட்டுமல்ல உயிரிழந்தோரை நினைவேந்துவதற்கு வடக்கு மக்களுக்கும் உரிமையுண்டு!
அமைச்சர் கிரிஷாந்த அபேசேன திட்டவட்டம்
தெற்கில் மட்டுமல்ல, உயிரிழந்தவர்களை நினைவேந்தும் உரிமை வடக்கு மக்களுக்கும் உள்ளது. தெற்கு இளைஞர்கள் உயிரிழக்கும்போது மட்டுமல்ல, வடக்கு இளைஞர்கள் உயிரிழக்கும்போதும் எமக்குக் கண்ணீர் வந்தது என்று தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இராணுவத்தினரைப் பற்றிப் பேசுகின்றார். புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கியது யார்? எனவே, இராணுவம் தொடர்பில் கதைப்பதற்கு சஜித்துக்கு தார்மீக உரிமை உள்ளதா? என்று கேட்க விரும்புகின்றேன்.
படையினர் நினைவுநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். அங்கு அவர் ஒரு வசனம்கூட இனவாதம் பேசவில்லை. இதுதான் எமது கொள்கை. தெற்கைப் போலவே நீதி, நியாயம் மற்றும் நேர்மைக்காக குரல் எழுப்பிய வடக்கு இளைஞர்களும் வீரர்கள்தான். தெற்கில் இளைஞர்கள் சாகும்போது மட்டுமல்ல, வடக்கில் இளைஞர்கள் சாகும்போதும் எமக்கு கண்ணீர் வந்தது.
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையும், அஞ்சலிக்கும் உரிமையும் அனைவருக்கும் உள்ளது. இதில் வடக்கு மட்டும் விதிவிலக்கல்ல. வடக்கில் உயிரிழந்த இளைஞர்களும் அஞ்சலிக்கப்பட வேண்டியவர்கள். அதில் எந்தத் தவறும் கிடையாது.
அவர்களும் இலங்கையர்கள்தான். ஏதேனும் காரணத்துக்காக போர் ஏற்பட்டிருக்கலாம். இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. காணாமல்போன சம்பவங்கள் இடம்பெற்றன. ஆக, நினைவுகூருவதில் என்ன தவறு உள்ளது? தேசிய மக்கள் சக்தியென்பது இனவாதக் கட்சி கிடையாது. எமது இதயங்களில் இனவாதம் இல்லை.
வடக்கு, கிழக்கில் பலவந்தமாக குடியேற்றங்களை ஏற்படுத்தியது யார்? யாழ். நூலக்கத்தை எரித்தது யார்? 1983 கலவரத்தை ஏற்படுத்தியது யார்? இந்த வன்முறைகளை யார் செய்தனரோ அவர்களுக்குச் சில கட்சிகள் இன்று சோரம் போயுள்ளன. இது கவலையளிக்கின்றது. வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே சட்டம், ஒரே சலுகைதான் இருக்க வேண்டும் – என்றார்.