இலங்கை
கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை சிப்பாய்

கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை சிப்பாய்
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் நேற்று காலை 10. மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.
பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.