இலங்கை
செம்மணிப் புதைகுழி அகழ்வுகளை சர்வதேச தரநிலையோடு நடத்துக; வலியுறுத்துகின்றது சர்வதேச மன்னிப்புச் சபை!

செம்மணிப் புதைகுழி அகழ்வுகளை சர்வதேச தரநிலையோடு நடத்துக; வலியுறுத்துகின்றது சர்வதேச மன்னிப்புச் சபை!
யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான விசாரணையின் வெளிப்படைத்தன்மையை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
யாழ்ப்பாணம், சித்துப்பாத்தியில் உள்ள இரண்டாவது செம்மணி மனித புதைகுழி என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வுகளில் இதுவரை 19 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்தது என்று தெரிவிக்கப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நீண்டகாலமாக தாமதமாகிவரும் உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விசாரணையை வழிநடத்தும் நீதித்துறை மருத்துவ அதிகாரி 45 நாள் நீடிப்புக் கோரியுள்ளார் என்றும், அடுத்த கட்டத்துக்கான செலவு மதிப்பீட்டை சமர்ப்பிக்க நீதிமன்றத்தால் உத்தர விடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் செயற்கைக்கோள்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான அருகிலுள்ள பகுதிகள் ட்ரோன்மூலம் படம்பிடிக்கப்பட்டன. அந்தக் காட்சிகள்பகுப்பாய்வுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அகழ்வாராய்ச்சியின் அடுத்த கட்டம் ஜூன் 26 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வாராய்ச்சி நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
போதுமான வளங்களை ஒதுக்குதல், குடும்பங்கள் மற்றும் ஊடகங்களுக்கான அணுகலுடன் வெளிப்படைத்தன்மையைப் பராமரித்தல் மற்றும் தளத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் போன்றவற்றை முன்வைத்து வெளிப்படைத்தன்மையை முன்வைக்கவேண்டும் – என்றுள்ளது.