இலங்கை
தற்போது நடக்கும் பேச்சுகள் கதிரைக்கான பேரம்பேசல்கள்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
தற்போது நடக்கும் பேச்சுகள் கதிரைக்கான பேரம்பேசல்கள்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்ற கதிரைக்கான பேரம்பேசுதல்கள் பற்றியதே. தமிழ் மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சு முன்னெடுப்பதாக இருந்தால் தேர்தலுக்கு முன்பே அதைச் செய்திருக்கலாம். தேர்தலில் இணைந்தும் போட்டியிட்டிருக்கலாம்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசியப் பேரவை ஆகிய இரண்டு தரப்பினரோடும் கடந்த நாள்களிலே பேச்சுகளை நடத்தியிருந்தோம். எந்தக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் இருக்கிறதோ அந்தக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் உதவிபுரியவேண்டும் என்பது எமது கோட்பாடு. இருதரப் பினரும் அந்தக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றிருந்தார்கள். இந்தநிலையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று அறிகிறோம். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் வவுனியாவில் வைத்து சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். சபைகளில் நிர்வாகத்தை அமைக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு நன்றிகள். உண்மை இல்லாமல் கதிரை தான் முக்கியம் என எவரோடும் கூட்டுவைக்கலாம் என்று செயற்படுவார்கள் என்றால் இணைந்து செயற்படுவது தொடர்பாக நாங்களும் சிந்திக்க வேண்டியிருக்கும் – என்றார்.