இலங்கை
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்; ஹர்ஷன தெரிவிப்பு!

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்; ஹர்ஷன தெரிவிப்பு!
எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு மாநகர சபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம். மக்களாணையை விளங்கிக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்;
நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே ஏதும் செய்யலாம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. அதிகாரம் நிலையற்றது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியில் எடுத்துரைத்துள்ளார்கள்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்கள் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.
வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 161 உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் பெரும்பாலான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு மாநகரசபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம்.
ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையில் அர்த்தத்தை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்- என்றார்.