பொழுதுபோக்கு
பிரபல நாட்டுப்புற பாடகி ‘கொல்லங்குடி கருப்பாயி’ மரணம்: பொதுமக்கள் இரங்கல்!

பிரபல நாட்டுப்புற பாடகி ‘கொல்லங்குடி கருப்பாயி’ மரணம்: பொதுமக்கள் இரங்கல்!
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த கலைமாமணி விருதுபெற்ற பிரபல கிராமிய பாடகர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (வயது 99) இன்று (14.06.2025) காலை 8 மணி அளவில் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் நாளை (15.06.2025) மதியம், கொல்லங்குடி இல்லத்திலிருந்து நடைபெற உள்ளது.முத்தன் – கருப்பியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக பிறந்த கருப்பாயி அம்மாள், சகோதரி மெச்சியம்மாள் மற்றும் சகோதரர்கள் சோலைமலை, சுப்பையா, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு உடன் பிறந்தவாளாவார். கிராமிய பாடல்களில் தனது தனித்துவமான குரலால் பிரபலமான இவர், வானொலிகளில் பாடல்களைக் கொடுத்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார்.பின்னர், இயக்குனர் ஆர்.பாண்டியராஜன், “ஆண்பாவம்” திரைப்படத்தின் மூலம் இவரை திரைப்படத்தில் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து “ஏட்டிக்கு போட்டி”, “கபடி கபடி”, “கோபாலா கோபாலா”, “ஆண்களை நம்பாதே” உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார். இயக்குனர் சசிகுமார் நடித்த “காரி” திரைப்படத்தில் இவர் கடைசி முறையாக நடித்திருந்தார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கலைமாமணி விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருப்பாயி அம்மாளிடம் “உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்ட போது, “எங்கள் ஊர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதனை உடனடியாக ஏற்று, அரசாணை மூலம் பள்ளிக்கூடத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. கருப்பாயி அம்மாளின் மறைவு, கிராமிய கலை உலகிற்கு பேரிழப்பாகும்.